-8,000 விமானங்கள் இரத்து-
-இயல்பு வாழ்க்கை பாதிப்பு-
அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்களைத் தாக்கியுள்ள சக்திவாய்ந்த பனிப்புயல் காரணமாக, கடந்த 24 மணிநேரத்தில் 8,000 இற்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டும், தாமதமடைந்தும் உள்ளதால் வான் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை மாத்திரம் அமெரிக்காவின் உள்நாட்டு விமான சேவைகளில் சுமார் 19 சதவீதமானவை இரத்துச் செய்யப்பட்டன. ஜொ புளூ நிறுவனம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு, தனது 80 சதவீத சேவைகளை இரத்துச் செய்தது.
யுனைடெட் ஏர்லைன்ஸ், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மற்றும் டெல்டா ஆகிய நிறுவனங்கள் தலா 20 சதவீத விமான சேவைகளை நிறுத்தின. புதன்கிழமை வரை சுமார் 1,600 விமானங்கள் இரத்துச் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பனிப்பொழிவு சற்றுத் தணிந்துள்ள நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை முதல் நியூயோர்க்கின் ஜே.எஃப்.கே, லா கார்டியா மற்றும் போஸ்டன் ஆகிய விமான நிலையங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவைகளை மீள ஆரம்பிக்க விமான நிறுவனங்கள் திட்டமிடப்பட்டிருந்தன.
அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதிகளில் சுமார் 2.5 அடி உயரத்திற்குப் பனி கொட்டியுள்ளதால், பிரதான வீதிகள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக வாகனங்களை வீதிகளில் செலுத்துவதற்குப் பல மாநிலங்கள் தடை விதித்துள்ளன. அத்துடன், நியூயோர்க் மற்றும் போஸ்டன் இடையிலான அம்ட்ராக்’ புகையிரத சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மோசமான வானிலை காரணமாகப் பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


















