நாட்டில் நடக்கும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையிலேயே நடப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் அரச தரப்பு உறுப்பினர்களின் வீடுகள் மீதும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் நடக்கின்றன. அப்படியென்றால் அவர்களும் அந்தக் குற்றக்கும்பல்களுடன் தொடர்புடையவர்களா? என கேட்கிறோம் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற வேலையாட்களின் வரவு செலவுத்திட்ட நிவாரணப்படி திருத்த சட்டமூலம் மற்றும் வேலையாட்களின் தேசிய குறைந்தபட்ச வேதன திருத்த சட்டமூலம் ஆகியவற்றின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
பாதாள குழுக்களுக்கு இடையிலான பிரச்சினையால் திட்டமிட்ட குற்றங்கள் நடப்பதாக அரசாங்கத்தில் இருப்பவர்கள் கூறுகின்றனர். அப்படியென்றால் வெலிகம பகுதியில் ஜே.வி.பி உறுப்பினர் ஒருவரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அப்படியென்றால் அவரும் திட்டமிட்ட குற்றங்களுடன் தொடர்புடையவரா? என்று கேட்க வேண்டியுள்ளது.
அத்துடன் உறுப்பினர்கள் இருவரை வாகனத்தில் வந்து தூக்கிச் சென்றதாகவும் பிரதேச மக்கள் கூறுகின்றனர். பொலிஸார் இருக்கும் போதே இவ்வாறு நடக்கின்றது என்றால் சாதாரண மக்களின் நிலைமை என்னவாகும்.சீதுவை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அரச தரப்பு உள்ளூராட்சி உறுப்பினர் ஒவரின் தந்தை மீது இந்த சூடு நடத்தப்பட்டுள்ளது. திட்டமிட்ட குழுக்களுக்கு இடையே பிரச்சினை நடப்பதாகவும், அவர்களிடையேவே துப்பாக்கி சூடுகள் நடத்தப்படுவதாகவும் கூறுகின்றீர்கள். ஆனால் திசைக்காட்டி உறுப்பினர்களின் வீடுகள் மீதும் சூடு நடத்தப்படுகின்றது என்றால் அவர்கள் திட்டமிட்ட குற்றக்கும்பல்களுடன் தொடர்புடையவர்களா? என்று கேட்கின்றேன் என்றார்.


















