இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது.
இதையடுத்து, 5 போட்டிகள் கொண்ட ரி-20 தொடர் நடந்து வருகிறது. முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. மெல்போர்னில் நடைபெற்ற 2 ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்திலும், ஹோபர்ட்டில் நடந்த 3 ஆவது ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.
இந்நிலையில் 4 ஆவது போட்டி கோல்டு கோஸ்டில் உள்ள கராராவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா – சுப்மன் கில் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். அடுத்து களமிங்கிய சிவம் துபே 22 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். நிதானமாக விளையாடிய சுப்மன் கில் 39 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
அடுத்ததாக களமிறங்கிய கப்டன் சூர்யகுமார 20 ரன்னிலும் திலக் வர்மா 5 ரன்னிலும் ஜித்தேஷ் சர்மா 3 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
கடைசி நேரத்தில் அக்சர் படேல் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்ததால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. அக்சர் பட்டேல் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் எல்லீஸ், அடம் சாம்பா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இறுதியில் 18.2 ஓவர்கள் முடிவில் 119 ரன்களுக்கு ஆஸ்திரேலியா சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 1.2 ஓவர்கள் மட்டுமே பந்துவீசிய வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

















