ஈரானிலிருந்து மருத்துவ உதவிகள் பெற இந்தியா வரவிருந்த விமானத்தை வான்வழித் தாக்குதல் மூலம் அமெரிக்கா தாக்கியுள்ளது.
ஈரானில் உள்ள மஷ்ஹத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ‘மஹான் எயார்’ எனும் விமானம் மனிதாபிமானப் பணிகளுக்காக மருத்துவ உதவிகளைப் பெற இந்தியா வரவிருந்தது. இந்த நிலையில் விமான நிலையத்தில் வைத்து அமெரிக்காவின் ஏவுகணைத் தாக்குதல் மூலம் அந்த விமானம் தாக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து உடனடியாக எந்த உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை.
ஈரான் விமானப் போக்குவரத்துத் துறை இந்தத் தாக்குதலுக்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். இதனைப் போர்க்குற்றம் என்றும் சர்வதேச சட்டங்களை மீறியதாகவும் அமெரிக்கா மீது ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. பல நாடுகளிடமிருந்து மனிதாபிமான முயற்சியின் ஒரு பகுதியாக மருத்துவ உபகரணங்களைக் கொண்டுவர அந்த விமானம் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும், மனிதாபிமான உதவிகளுக்குப் பயன்படுத்தப்படும் பயணிகள் விமானத்தைத் தாக்குவது, சர்வதேச விமானப் போக்குவரத்து மற்றும் மனித உரிமை தொடர்பான சட்டங்களின்படி தவறாகும்.
சிகாகோ உடன்படிக்கை (1944), மாண்ட்ரியல் உடன்படிக்கை (1971), பயணிகள் விமானங்களின் மீதான தாக்குதல்களைத் தடைசெய்து அதனைப் போர்க்குற்றமாக அறிவிக்கும் ஜெனிவா உடன்படிக்கை பிரிவு (52) ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி ஈரான் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் தொடர்பாக சுதந்திரமான விசாரணையைத் தொடங்கவும், சம்பந்தப்பட்டவர்களைப் பொறுப்பேற்கச் செய்து, இதுபோன்ற அச்சுறுத்தல்களிலிருந்து சிவில் விமானப் போக்குவரத்தைப் பாதுகாக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த ஈரான் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை சர்வதேச அமைப்புகளை வலியுறுத்தியுள்ளது.
தாக்குதலுக்குள்ளான விமானம் நாளை புதன்கிழமை மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருள்களை ஏற்றிச்செல்ல இந்தியா வரவிருந்தது. முன்னதாக, கடந்த மார்ச் 18 அன்று ஈரானிய செஞ்சிலுவைச் சங்கம் மூலம் மருத்துவ உதவிகளை முதல்முறையாக இந்தியா அனுப்பி வைத்தது. தில்லியில் உள்ள ஈரான் தூதரகம் அதற்கு நன்றி தெரிவித்திருந்தது.
ஈரானின் தனியார் விமான நிறுவனங்களில் ஒன்றான ‘மஹான் ஏர்’ நிறுவனத்துக்கு பல ஆண்டுகளாக அமெரிக்கா தடை விதித்திருந்தது.
இந்த விமான நிறுவனத்திற்கும் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படைக்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டிய நிலையில், உள்நாட்டு மோதல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் ஆயுதங்களை இந்நிறுவனம் கொண்டு செல்வதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது.


















