காசா அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இணக்கம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, இன்று வியாழக்கிழமை மசகு எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.
பிரித்தானிய பிரெண்ட் சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 0.77 சதவீதத்தால் குறைந்து 65.74 அமெரிக்க டொலராக பதிவாகியது.
அமெரிக்க மேற்கு டெக்சாஸ் சந்தையில் 0.88 சதவீதத்தால் குறைந்து 62 அமெரிக்க டொலராக பதிவாகியது.

பாலஸ்தீனப் பகுதியில் இரண்டு வருடங்களாக நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் திட்டத்தின் கீழ், காசா அமைதித் திட்டம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான நீண்டகால ஒப்பந்தத்துக்கு இஸ்ரேலும் ஹமாஸும் இணங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை அரசாங்கத்தை கூட்டி, போர் நிறுத்த ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதாக தெரிவித்தார்.
காசாவில் நடந்த போரினால் மசகு எண்ணெய் விலைகள் அதிகரித்து காணப்பட்டன. ஏனெனில் போர் பரந்த பிராந்திய மோதலாக வளர்ந்தால் உலகளாவிய மசகு எண்ணெய் விநியோகத்திற்கு ஏற்படக்கூடிய ஆபத்தை முதலீட்டாளர்கள் எடைபோட்டனர்.
உக்ரேன் சமாதான ஒப்பந்தத்தில் முன்னேற்றம் தடைப்பட்டதால் ரஷ்யாவுக்கு எதிரான தடை நடவடிக்கைகள் தொடரும் என முதலீட்டாளர்கள் கருதியதால் புதன்கிழமை மசகு எண்ணெய் விலைகள் சுமார் 1 சதவீதம் அதிகரித்து. ஒரு வாரத்திற்குப் பின்னர் அதிகபட்ச நிலையை எட்டியது.
கடந்த வாரம் மொத்த அமெரிக்க பெட்ரோலிய பொருட்கள் வழங்கல் — அமெரிக்க எண்ணெய் நுகர்வின் ஒரு அளவுகோல் — ஒரு நாளுக்கு 21.990 மில்லியன் பீப்பாய்களாக அதிகரித்தன. இது 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குப் பின்னர் பாரியளவில் அதிகரித்துள்ளதாக எரிசக்தி தகவல் நிர்வாகத்தின் அறிக்கை சுட்டிகாட்டியுள்ளது.
















