அரசாங்கம் சம்பளத்தை அதிகரித்துவிட்டு அந்த சம்பளத்தில் பெருந் தொகையை மீண்டும் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் வரிக்கொள்கையையே அரசாங்கம் செயற்படுத்துகின்றது என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற வேலையாட்களின் வரவு செலவுத்திட்ட நிவாரணப்படி திருத்த சட்டமூலம் மற்றும் வேலையாட்களின் தேசிய குறைந்தபட்ச வேதன திருத்த சட்டமூலம் ஆகியவற்றின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
ஆட்சியில் இருப்பவர்கள் 15 வருடங்களுக்கு முன்னர் கூறியவற்றை இப்போதும் தெரிவித்து வருகின்றனர். ஆட்சிக்கு வந்த பின்னரும் அதே பொய்களை கூறுகின்றனர். ஆட்சிக்கு வரும்போது எங்களை தயாராக இருக்குமாறு கூறினீர்கள். நீங்களும் தயாராக இருங்கள். போகும் இடத்தை காட்டுகிறோம். சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் கூறுகின்றீர்கள்.
அது நல்ல விடயம். ஆனால் சம்பளத்தை அதிகரித்து அந்த சம்பளத்திற்கு நிகராக வரியை அறவிட்டு மீண்டும் அரசாங்கத்திற்கு பெற்றுக்கொள்கின்றீர்கள். இதனால் சம்பளம் அதிகரிக்கப்பட்டமையின் நன்மை ஊழியருக்கு கிடைக்கின்றதா? அவ்வாறு இல்லை. வரிக் கொள்கைக்கு அமைய அதிகரிக்கப்பட்ட சம்பளத்தில் பெருமளவு தொகையை அரசாங்கம் பெற்றுக்கொள்கின்றது.
ஆட்சிக்கு வர முன்னர் ஒரே கையெழுத்தில் செய்துவிடுவோம் என்று கூறினர். ஆனால் அது இலகுவான விடயம் அல்ல என்பது இப்போது புரிந்திருக்கும். இப்போது சகல அரச நிறுவனங்களிலும் பழிவாங்கல்கள் இடம்பெறுகின்றன. தொழிற்சங்கங்கள் ஒடுக்கப்படுகின்றன. தொழிற்சங்கங்களை நீங்களே வழிநடத்தினீர்கள். ஆசியர் சங்கத்தினர் பாடசாலைக்கு செல்லாமல் அதில் இருந்தனர். இப்போது தொழிற்சங்கங்களை கைவிட்டு, இடமாற்றங்களை செய்து அரச சேவையை செயலிழக்கச் செய்ய வேண்டும் என்று கூறுகின்றீர்கள். தமது அரசியல் தலையீடுகள் தொடர்பில் கதைக்காது அரச அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
ஆனால் அரச துறையை இல்லாமல் செய்துவிட வேண்டாம். சிறியவர்களின் அரசாங்கம் இப்போது முதலாளிகளின் அரசாங்கமாக மாறியுள்ளது. அவர்களிடம் கேட்டுதான் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றது. கோடீஸ்வர வர்த்தகர்களிடம் கேட்டுதான் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. இதனை விடுத்து சாதாரண மக்களிடம் கேட்பதில்லை என்றார்.


















