தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனித பயணம் மேற்கொண்டனர்.
அவர்கள் மெக்காவில் தொழுகையை முடித்து விட்டு மதீனாவுக்கு பேருந்தில் சென்று கொண்டு இருந்தனர். ஜோரா என்ற இடத்தில் பேருந்து சென்றுகொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக பஸ் மீது டீசல் பவுசர் மோதியதில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது.
இந்தக் கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 20 பெண்கள், 11 சிறுவர்கள் உட்பட 42 பேர் பலியானார்கள். பேருந்து முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் அவர்கள் உடல் கருகிய நிலையில் கிடந்தன.
இதைத் தொடர்ந்து மீட்புப் படையினர் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்றனர். பலியான அனைவரும் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இச்சம்பவம் குறித்து அறிந்த தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, உயிரிழந்தவர்கள் குறித்து முழு விவரங்களை கண்டறியவேண்டும் என்றும் களத்தில் இறங்கி உரிய நிவாரண முயற்சிகளை வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் தலைமைச் செயலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இதனிடையே, பேருந்து விபத்தை அடுத்து ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

















