ஜப்பானின் மேற்சபையில் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது அந்த நாட்டு அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் பிரதமர் சிகேரு இசிபா பதவி விலகும் எண்ணம் எதுவுமில்லை என தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் விலைகள் அமெரிக்காவின் வரி அதிகரிப்பு குறித்த அச்சுறுத்தல் போன்றவற்றினால் ஆளும்கட்சி மீது அதிருப்தியில் உள்ள மக்கள் ஞாயிற்றுக்கிழமை மிகவும் கடுமையான போட்டி நிலவிய தேர்தலில் வாக்களித்தனர்.
248 உறுப்பினர்கள் கொண்ட மேற்சபையில் தனது கட்டுப்பாட்டை தக்கவைப்பதற்கு ஆளும் கட்சிக்கு 50 ஆசனங்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த கட்சி 47 ஆசனங்களை மாத்திரம் பெற்றுள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான அரசமைப்பு ஜனநாயக கட்சி 22 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.மேற்சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஆறுவருடங்கள் .
ஜப்பான் நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் ஏற்கனவே பெரும்பான்மையை இழந்துள்ள நிலையிலேயே ஆளும் கட்சி மேற்சபையிலும் பெரும்பான்மையை இழந்துள்ளது.
இதேவேளை மிகவும்கடுமையான தேர்தல் முடிவை முழுமனதுடன் ஏற்றுக்கொள்வதாக 68 வயது பிரதமர் சிகேரு இசிபா தெரிவித்துள்ளார்.
நீங்கள் தொடர்ந்தும் பிரதமராகவும் கட்சி தலைவராகவும் நீடிப்பீர்களா என்ற கேள்விக்கு ஜப்பான் பிரதமர் ஆம் அது சரியானது என தெரிவித்துள்ளார்.


















