நிலவு துருப்பிடித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீன விஞ்ஞானி ஜிலியாங் ஜின் தலைமையிலான குழு நிலவின் மேற்பரப்பை பற்றி ஆய்வு மேற்கொண்டது. அதில் நிலவுக்கும், பூமிக்கும் இடையே உள்ள ஆழ்ந்த தொடர்பு குறித்து கண்டறிந்துள்ளனர்.

தொடர்ந்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், நிலவுக்கு கெட்ட நிகழ்வு ஒன்று நடந்து வருகிறது. நிலவின் மேற்பரப்பில் அதிலும் துருவப் பகுதிகளில் ஹெமடைட் என்ற இரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது ஒரு வகையான இரும்பு ஆக்சைடு ஆகும். நிலவு துருப்பிடிக்கிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்கு ஆக்சிஜன் மற்றும் தண்ணீர் தேவை. ஆனால், இவையிரண்டும் நிலவில் அதிகளவில் கிடையாது.
அப்படியென்றால் இதற்கு அடிப்படையாக என்ன இருக்கும்? இந்த துருப்பிடித்தலுக்கு பூமியே காரணம். பூமியின் வளிமண்டலத்தில் இருந்து காற்றானது நிலவுக்கு பயணித்து இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இதனை ஆய்வகத்தில் செயற்கையான முறையில் பரிசோதனை செய்து கண்டறிந்து உள்ளனர்.
இந்தியாவின் சந்திரயான் – 1 திட்டத்தின்போது, நிலவின் துருவப் பகுதிகளில் ஹெமடைட் இருந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது.


















