அண்டர்சன் – டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இங்கிலாந்தும், தொடரை சமப்படுத்தும் நோக்குடன் இந்தியாவும் மோதும் தீர்மானம் மிக்க கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கெனிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (31) பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இங்கிலாந்து 2 – 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது.
முதலாவது போட்டியில் 5 விக்கெட்களாலும் 3ஆவது போட்டியில் 22 ஓட்டங்களாலும் இங்கிலாந்து வெற்றிபெற்றது. இரண்டாவது போட்டியில் இந்தியா 336 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. நான்காவது போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.
இரண்டு அணிகளிலும் சில வீரர்கள் காயங்கள் மற்றும் உபாதைக்குள்ளாகி உள்ளதால் விளையாடவில்லை.
உபாதைக்குள்ளான ரிஷாப் பான்ட் இன்றைய போட்டியில் விளையாடமாட்டார். அதேவேளை, பணிச் சுமையைக் குறைக்கும் வகையில் ஜஸ்ப்ரிட் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
ரிஷாப் பான்டுக்கு பதிலாக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள த்ருவ் ஜுரெல் விக்கெட் காப்பாளராக கடைசிப் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறுகிறார்.
பும்ரா விளையாடாததால் ஆகாஷ் தீப், மொஹமத் சிராஜ் ஆகிய இருவரும் பிரதான பந்துவீச்சாளர்களாக விளையாடவுள்ளனர். அவர்கள் இருவரும் வரலாற்று முக்கியம்வாய்ந்த எஜ்பெஸ்டன் டெஸ்ட் போட்டியில் 17 விக்கெட்களைப் பகிர்ந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை, ஷர்துல் தாகூருக்குப் பதிலாக குல்தீப் யாதவ்வை அணியில் இணைப்பது குறித்து அணி முகாமைதத்துவம் ஆலோசித்து வருகிறது.
இங்கிலாந்து அணியில் உபாதைக்குள்ளான வழமையான அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் இன்றைய போட்டியில் விளையாட மாட்டார். கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சகலதுறைகளிலும் பிரகாசித்து தொடர்ச்சியாக ஆட்டநாயகனான பென் ஸ்டோக்ஸ் அணியில் இடம்பெறாதது இங்கிலாந்துக்கு பேரிடியாகும்.
அவருக்குப் பதிலாக அணித் தலைவர் பொறுப்பை ஒல்லி போப் ஏற்றுள்ளார்.
அத்துடன் ஜொவ்ரா ஆச்சருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. லியான் டோசன், ப்றைடன் கார்ஸ் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளார்.
இந்த மூவருக்குப் பதிலாக ஜேக்கப் பெத்தெல், கஸ் அட்கின்சன், ஜெமி ஓவர்ட்டன் ஆகியோர் இறுதி அணியில் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவும் இங்கிலாந்தும் சமபலம் கொண்ட அணிகளாக இருப்பதால் இந்த டெஸ்ட் போட்டி கடைசிவரை விறுவிறுப்பை ஏற்படுத்தும் என பெரிதும் எதிர்பார்க்கப்டுகிறது.
இந்தத் டெஸ்ட் தொடரில் 18 சதங்கள் குவிக்கப்பட்டுள்ளதுடன் ஷுப்மான் கில் மாத்திரம் 4 சதங்களைக் குவித்து துடுப்பாட்டத்தில் அசத்தியுள்ளார்.
இந்தியா சார்பாக ஷுப்மான் கில் (722 ஓட்டங்கள்), கே.எல். ராகுல் (511), ரவீந்த்ர ஜடேஜா (454) யஸஸ் ஜய்ஸ்வால் (291) ஆகியோர் துடுப்பாட்டத்திலும் மொஹம்மத் சிராஜ் (14 விக்கெட்கள்), ஆகாஷ் தீப் (12), வொஷிங்டன் சுந்தர் (7), ரவிந்த்ர ஜடேஜா (7) ஆகியோர் பந்துவீச்சிலும் பிரகாசித்துள்ளனர்.
இங்கிலாந்து சார்பாக ஜெமி ஸ்மித் (424), ஜோ ரூட் (403), பென் டக்கெட் (365), ஹெரி ப்றூக் (317), ஒல்லி போக் (257) ஆகியோர் துடுப்பாட்டத்திலும் ஜொஷ் டங் (11), கிறிஸ் வோக்ஸ் (10) ஆகியோர் பந்துவீச்சிலும் பிரகாசித்துள்ளனர்.


















