பங்களாதேஷில் இடம்பெற்ற விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ்வாறு உயிரிழந்தவர்களில் விமானி ஒருவர் உள்ளிட்ட ஏனையவர்களில் பல மாணவர்கள் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பங்களாதேஷ் விமானப்படையின் ஜெட் விமானம் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டபோது தலைநகர் டாக்காவில் உள்ள மைல்ஸ்டோன் கல்லூரியின் இரு மாடிக் கட்டிடத்தின் மீது வீழ்ந்து வெடித்து தீப்பற்றி எரிந்ததில் மாணவர்கள் இருந்த நான்கு வகுப்பறைகள் அனர்த்தத்தில் சிக்கின.
விபத்து இடம்பெற்ற நேற்றைய தினமான திங்கட்கிழமை (21) 20 பேர் உயிரிழந்திருந்தனர். பின்னர் காயமடைந்தவர்களில் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
இந்த விபத்தில் சுமார் 170 பேர் வரை காயமடைந்துள்ள நிலையில், சுமார் 70 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் இவர்களில் பலர் மாணவர்கள் எனவும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாமெனவும் அஞ்சப்படுகின்றது.

















