எம்மில் சிலர் தொடர்ந்து நீண்ட நேரமாக உட்கார்ந்திருக்கும் தருணத்திலும் , நடைபயிற்சி அல்லது மெல்லோட்ட பயிற்சியின் போதும் அல்லது மாடிப்படி ஏறும் போதும் பிட்ட பகுதியில் அசௌகரியம் ஏற்படுவதை அவதானித்திருப்போம்.
இத்தகைய பாதிப்பிற்கு மருத்துவ மொழியில் பிரிஃபார்மிஸ் சிண்ட்ரோம் என குறிப்பிடுகிறார்கள். இதற்கு உரிய காலத்தில் முறையாக சிகிச்சை பெற்றால் முழுமையான நிவாரணம் கிடைக்கும் என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
எம்மில் சிலருக்கு சயாட்டிக் நரம்பு வலியை போலவே வலியை உணர்வார்கள். இது தொடர்பாக வைத்தியர்களை சந்தித்து அவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொண்ட பிறகு சிலருக்கு பிரிஃபார்மிஸ் சிண்ட்ரோம் எனும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை அவதானிப்பர்.
இத்தகைய பாதிப்பு முதுகெலும்பு பகுதியிலிருந்து உங்கள் பிட்ட பகுதி வழியாக தொடையின் மேல் பகுதி வரை தட்டையாக ஒரு தசை செல்கிறது. இந்த தசை பகுதியில் நரம்பு அழுத்தம் ஏற்பட்டாலும் அல்லது இந்த தசை பகுதியில் இறுக்கம் ஏதேனும் ஏற்பட்டாலும் அல்லது தசை பகுதியில் சேதம் ஏற்பட்டாலும் உங்களுக்கு வலி உண்டாகும்.
கீழ்ப்பக்க முதுகு வலி இதன் முதன்மையான அறிகுறியாகும். பிரிஃபார்மிஸ் தசைப் பகுதியில் தொற்று பாதிப்பு , தசை சேதம் போன்ற பாதிப்பு ஏற்பட்டிருந்தால்.. இத்தகைய வலி உண்டாகும். சிலருக்கு வலி, எரிச்சல் ,குத்துதல் போன்ற உணர்வு , மரத்துப் போதல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.
இந்தத் தருணத்தில் வைத்தியர்கள் அல்ட்ரா சவுண்ட், சிடி ஸ்கேன், இ எம் ஜி ஆகிய பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பார்கள். இதனைத் தொடர்ந்து கட்டாய ஓய்வு , பிரத்யேக மருந்தியல் சிகிச்சை, இயன்முறை சிகிச்சை, வலி நிவாரணி சிகிச்சை ஆகியவற்றை வழங்கி முதன்மையான மற்றும் முழுமையான நிவாரணத்தை அளிப்பார்கள்.
இந்த சிகிச்சைக்குப் பிறகு வைத்தியர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறையை உறுதியாக பின்பற்றினால் இத்தகைய பாதிப்பு மீண்டும் ஏற்படா வண்ணம் தற்காத்துக் கொள்ளலாம்.