பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் போகோ, செபு உள்ளிட்ட நகரங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 72 ஆக உயர்ந்துள்ளது.
மணிலா மற்றும் அதன் மத்திய பகுதிகளை மையமாகக் கொண்டு வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 புள்ளிகளாக பதிவானதுடன், அது பூமிக்கு அடியில் 19 கிலோ மீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து 7.0 மற்றும் 7.0 என மேலும் இரண்டு வலுவான நிலநடுக்கங்களும் அடுத்தடுத்து பதிவாகின. இந்தத் தொடர் அதிர்வுகளால் போகோ, செபு ஆகிய நகரங்களில் கடும் நில அதிர்வு ஏற்பட்டது.

நிலநடுக்கத்தின் கோரத் தாண்டவத்தால் பல வீடுகள், அலுவலகங்கள் மற்றும் இதர கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாயின. இந்தக் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 72 பேர் பலியாகி உள்ளனர். மேலும் சுமார் 200 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
விரைந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதித்துள்ளனர். நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மலைப்பகுதி கிராமங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி பலர் புதையுண்டனர். இடிபாடுகளிலும், நிலச்சரிவிலும் புதையுண்டவர்களைத் தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட போகோ நகருக்கு அந்நாட்டு ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் நேரில் சென்று பார்வையிட்டார். பலியானோருக்கு இரங்கலைத் தெரிவித்த அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்கவும், பேரிடர் மீட்புப் படையினருக்குத் தேவையான உத்தரவுகளையும் பிறப்பித்தார்.


















