ஒரு ஊருல ஒரு மிகப் பெரிய ராஜா இருந்தாரு. ஒருநாள் அந்த ராஜா வெளிநாட்டுக்கு போக நினைச்சாரு. அதனால தன்னோட 30 வயது மகன அரசரா நியமிச்சாரு. வயசு கொஞ்சமா இருந்தாலும் அமைச்சர்களோட ஆலோசிச்சு நல்லபடியா ஆட்சி செஞ்சா நிரந்தர அரசனா உன்ன நியமிக்குறேனு சொன்னாரு.
ஆனா, திடீர்னு பதவி கிடைச்சதால அகங்காரம் வந்துடுச்சு அந்த புது அரசருக்கு. இந்த வயசான அமைச்சர்கள் கிட்ட இருந்து எப்படி விலகி நின்னு ஆட்சி செய்யுறதுனு யோசிச்சாரு.

உடனே 50 வயசுக்கு மேல இருக்குற எல்லாரும் இந்த நாட்டுக்கு வீண் பாரம் அவுங்களால நாட்டுக்கு எந்த பிரயோஜனமும் இல்ல. அதனால 50 வயசுக்கு மேல இருக்கவங்கள எல்லாம் நாடு கடத்துறேன்னு அறிவிச்சாரு.
அதன்படி நாட்டுல இருந்த எல்லா வயசானவங்களும், கூடவே வயசான அமைச்சர்களும் நாட்ட விட்டே வெளியேறி போய்ட்டாங்க

ஆனா ஒரே ஒரு விவசாயி மட்டும் தன்னோட தாத்தாவ பிரிய மனம் இல்லாம வீட்டுக்குள்ளேயே ஒரு அறையில அவர ஒளிச்சு வச்சாரு. யாருக்கும் தெரியாம அவர அறைக்குள்ளேயே இருக்க சொன்னாரு அந்த விவசாயி.
அப்பத்தான் ஒருநாள் திடீர்னு பெரிய மழை பெஞ்சது அந்த நாட்டுல. நாட்டுல இருக்குற எல்லா இடமும் தண்ணியில மூழ்கி போய்டுச்சு. அந்த நாட்டுல இருக்குற விவசாய நிலத்துல விதைச்சிருந்த விதைகளையும், புதுசா முளைச்சிருந்த செடிகளும் தண்ணியில அடிச்சிட்டு போய்டுச்சு.

மழை நீர் வடிஞ்சதுக்கு பிறகு அந்த நாட்டுல விவசாயம் செய்ய ஒரு விதை கூட மிச்சம் இல்லாம போச்சு.
நாட்டுல இருந்தது எல்லாம் அதிகம் அனுபவம் இல்லாத இளவயசு விவசாயிங்க மட்டுமே. அதனால அவுங்களுக்கு எப்படி திரும்பவும் விவசாயம் செய்யுறதுனு தெரியல.
அதனால அந்த நாட்டுல மிகப் பெரிய பஞ்சம் தலைவிரிச்சி ஆடுச்சு. ஒரு வேளை சாப்பாட்டுக்கே வழி இல்லாம எல்லாரும் பட்டினி கிடந்தாங்க.

இந்த விஷயத்தை தன்னோட தாத்தாகிட்ட எங்களுக்கு இப்ப விவசாயம் செய்ய ஒரு பிடி விதைகள் கூட இல்லைனு சொன்னான் அந்த இளம் விவசாயி. உடனே அறிவுலயும், அனுபவத்துலயும் பெரியவரான அந்த தாத்தா அவனுக்கு ஒரு யோசனை சொன்னாரு.
தாத்தா சொல்படி விதைகளை தேடிப் போனான். அவனோட தாத்தா சொன்ன மாதிரி அவனுக்கு நிறைய விதைகள் கிடைச்சது.
அந்த விதைகளை வச்சு விவசாயம் செய்ய ஆரம்பிச்சான். இந்த விஷயத்த கேள்விப்பட்ட அரசன் அவன கூப்பிட்டு விசாரிச்சாரு.

பயந்து போன அந்த இளம் விவசாயி தன்னோட தாத்தாவ பத்தி சொன்னான். உடனே காவலாளிகளை விட்டு அந்த தாத்தாவ பிடிச்சிட்டு வர சொன்னான் அந்த அரசன்.
அரண்மனைக்கு வந்த அந்த வயசான தாத்தா கிட்ட எப்படி நீங்க மட்டும் விதைகளை கண்டு பிடிச்சி விவசாயம் செய்யுறீங்கன்னு கேட்டான் அந்த அரசன்.
அதுக்கு அந்த தாத்தா சொன்னாரு. இந்த உலகத்துல ஒரு பயனுள்ள பொருள் தனக்கு உணவாவோ, இல்லை மதிப்பாவோ இருந்தா மட்டுமே ஒருத்தன் அத சேமிச்சு வைப்பான்.

அதுமாதிரிதான் விதைகளை உணவா எடுத்துக்கிறது நாம் மட்டும் இல்ல. பறவைகளும்தான். அதனால பறவைகள் அதிகம் வாழுற பழைய பெரிய மரங்களுக்கு அடியில பறவைகளோட எச்சம் இருக்கும். அதுல கண்டிப்பா விதைகள் இருக்கும்னு சொன்னேன்.
அதே மாதிரி விதைகளை மதிப்புமிக்கதா நினச்சு சேமிச்சு வைக்கிறது எறும்புகள்தான். அதனால் எறும்புகள் கூட்டமா வாழுற புத்து எல்லாத்தையும் தேடிப் பார்க்க சொன்னேன்.

நான் சொன்னது மாதிரியே என்னோட பேரன் விதைகளை தேடி கொண்டுவந்து விவசாயம் செய்யுறான்னு சொன்னாரு.
அப்பத்தான் மூத்தவங்களோட அனுபவ அறிவுக்கு முன்னாடி இளைஞர்கள் எப்பவும் தோத்து போறாங்கன்னு புரிச்சிக்கிட்டான் அந்த அரசன்.
உடனே நாட்ட விட்டு வெளியேறின எல்லா முதியவர்களையும், வயசான அமைச்சர்களையும் சேதி சொல்லி திரும்ப கூட்டிட்டு வந்தான்.
திரும்பி நாட்டுக்கு வந்த அனுபவசாலிகளின் பேச்சு கேட்டு நல்லபடியா ஆட்சி செய்ய ஆரம்பிச்சான் அந்த புது அரசன்.
கொஞ்ச நாட்களுக்கு அப்புறமா அந்த நாட்டுக்கு திரும்பி வந்த பழைய அரசர், தன்னோட மகன் தன்னைவிட புத்திசாலியா நாட்டை ஆட்சி செய்யுறத பார்த்து அவனையே நிரந்தர அரசனா அறிவிச்சாரு.


















