ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனையைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் ‘டூம்ஸ்டே மீன்’ என்று செல்லப்பெயர் கொண்ட அரிய வகை மீனை பிடித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள், மன்னார் வளைகுடா பகுதியிலிருந்து திரும்பும்போது இந்த அதிசய மீன் பிடிபட்டதைக் கண்டனர்.
மீன்களைத் தரம் பிரித்து கொண்டிருந்தபோது, சுமார் ஆறு கிலோகிராம் எடையுள்ள, பளபளப்பான, நீளமான மீன் ஒன்றைக் கண்டு மீனவர்கள் ஆச்சரியமடைந்தனர். இது ஓர்ஃபிஷ் என அடையாளம் காணப்பட்டது.
ஓர்ஃபிஷ் என்பது ஆழ்கடலில் வாழும் ஒரு உயிரினமாகும். இது பொதுவாக மீன்பிடி வலைகளில் சிக்குவது அரிதாகும்.
ஜப்பானிய கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள், இந்த மீன் கரைக்கு அருகே காணப்பட்டால் நிலநடுக்கம் அல்லது பிற இயற்கை பேரழிவுகள் ஏற்படக்கூடும் என்று நம்புவதால், இதற்கு ‘டூம்ஸ்டே மீன்’ என்று செல்லப்பெயர் சூட்டியுள்ளனர்.


















