இலங்கையிலுள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்காக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் நடவடிக்கைகள் வழமை போன்று முன்னெடுக்கப்பட்ட போதிலும், மத்திய கிழக்கு வான்பரப்பு மூடப்பட்டுள்ளதன் காரணமாக உலகளாவிய விமானப் போக்குவரத்து இன்னும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், மத்திய கிழக்கு ஊடாகச் செல்லாத சில வர்த்தக விமான சேவைகளைப் பயன்படுத்த முடியும் எனவும், விமானத் தாமதங்கள் அல்லது ரத்துச் செய்தல்கள் குறித்து அந்தந்த விமான நிறுவனங்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகள் மாற்றுப் பயணத் திட்டங்களை வகுப்பதற்கு வாய்ப்பளிக்கும் வகையில், இலங்கை அரசாங்கம் 14 நாட்களுக்கு இலவச விசா நீடிப்பை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.
அவசர உதவி தேவைப்படின், அமெரிக்கத் தூதரகத்தின் அமெரிக்கப் பிரஜைகள் சேவைப் பிரிவை (1094 11 202 8500) தொடர்பு கொள்ளலாம் எனவும், திங்கள் முதல் வியாழன் வரை வேலை நாட்களில் பிற்பகல் 1.00 மணி முதல் 2.00 மணி வரை இச்சேவை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், விமானப் பயணங்கள் தவிர்ந்த ஏனைய விடயங்களுக்கு இலங்கை சுற்றுலாத்துறையின் 1912 என்ற இலக்கத்தைத் தொடர்பு கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்கால பாதுகாப்பு தொடர்பான மேலதிக தகவல்களுக்கு இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் இணையதளம் மற்றும் உத்தியோகபூர்வ சமூக ஊடகக் கணக்குகளைப் பின்பற்றுமாறு பிரஜைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


















