அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகத்திற்காக டிஜிட்டல் அட்டை முறையை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரச வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கையில் டிஜிட்டல் அட்டை முறையைப் பயன்படுத்துவதன் அவசியம் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் மூலம், எரிபொருள் தேவைக்கேற்ப இணையவழி வங்கி முறைமை ஊடாக அதற்கான பணத்தை ஈடுசெய்வதற்கும், தனிநபர் தலையீடுகளைக் குறைப்பதன் மூலம் உயர் வெளிப்படைத் தன்மையுடனும் வினைத்திறனுடனும் எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கை வங்கியும் பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் இணைந்து வாகனங்களுக்கு டிஜிட்டல் அட்டை மூலம் எரிபொருள் விநியோகம் செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளன.
அதற்கமைய, முதற்கட்டமாக ஒரு முன்னோடித் திட்டமாக ஜனாதிபதி செயலகத்தின் வாகனத் தொகுதிக்கு எரிபொருள் விநியோகிப்பதற்காக இந்த முறையை அமுல்படுத்தவும், அதன் வெற்றியின் அடிப்படையில் ஏனைய அரச நிறுவனங்களுக்கும் இம்முறையை விரிவுபடுத்துவதற்கும் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


















