-ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் நெருக்கடி தீவிரம்-
நாட்டில் அரச பல்கலைக்கழக அமைப்பில் விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு சுமார் 50 சதவீத தட்டுப்பாடு நிலவுவதாகவும், ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் இந்த நிலைமை மிகவும் பாரதூரமானதாக மாறியுள்ளதாகவும் அந்தப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர் சங்கத் தலைவர் திலின நிரோஷ், எச்சரித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தில் தற்போது சுமார் 2,000 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு கற்பிக்க வெறும் 12 பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.
இப்பீடத்தில் விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கான தட்டுப்பாடு தற்போது 45 சதவீதமாக உள்ளது. விரிவுரையாளர் தட்டுப்பாட்டினால் மாணவர்கள் எதிர்கொள்ளும் மிக முக்கிய சவாலாக ஆய்வுப் பணிகள் உள்ளது.
ஆய்வுப் பணிகளுக்குத் தேவையான வழிகாட்டல்களையும் அறிவையும் வழங்கப் பேராசிரியர்கள் போதிய அளவில் இல்லை. இதனால் மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிப்பதிலும், பட்டப்படிப்பைத் தொடர்வதிலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி மற்றும் வரி அதிகரிப்பு காரணமாகப் பெருமளவிலான விரிவுரையாளர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளமை, அரச பல்கலைக்கழகங்களில் இவ்வாறான ஆளணித் தட்டுப்பாடு ஏற்பட பிரதான காரணமாக தெரிவிக்கப்படுகிறது.
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆறு துறைகளிலும் பயிலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இதனால் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் உயர்கல்வி அமைச்சும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் உடனடியாகத் தலையிட்டுத் தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என்றார்.


















