ஈரான் மீதான ஆக்கிரமிப்புத் தாக்குதல்கள் மற்றும் அந்நாட்டின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டமைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது வன்மையான கண்டனங்களை வெளியிட்டுள்ளது. ஈரானின் ஆள்புல ஒருமைப்பாட்டுக்குத் தமது கட்சி பூரண ஆதரவை வழங்கும் என அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
மக்கள் காங்கிரஸ் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்ட செய்தி ஆழ்ந்த அதிர்ச்சியளிக்கின்றது. இது ஒரு தனிப்பட்ட தலைவரின் மரணம் மட்டுமல்ல. ஒரு தேசத்தின் இறைமை மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டின் மீது நடத்தப்பட்ட நேரடித் தாக்குதலாகும். சர்வதேச சட்டங்களையும் ஒழுங்கு விதிகளையும் மீறி இக்கொடூரம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியம் பாரிய ஸ்திரமின்மையை எதிர்நோக்கியுள்ளது. சுதந்திர தேசங்களை இல்லாதொழிப்பதற்கான அப்பட்டமான அத்துமீறல்களே இவை. இந்த அராஜகங்களை நீதிக்கு முன்னால் ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது.
ஆதரவு என்ற போர்வையில் நாடுகளின் உரிமைகளைக் களவாடும் ‘கபட அரசியலுக்கு” மத்திய கிழக்கு நாடுகள் மண்டியிடக் கூடாது. இறைமை அடிமைப்படுத்தப்படுவதை ஜனநாயகம் ஒருபோதும் ஏற்காது.
வன்முறைகள் மற்றும் படுகொலைகள் மூலம் ஒருபோதும் சமாதானத்தையோ அல்லது நீதியையோ அடைந்துவிட முடியாது.
எனவே, மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களைப் பேச்சுகள் ஊடாகத் தீர்த்து வைப்பதையே எமது கட்சி விரும்புகின்றது. ஈரானின் ஒருமைப்பாட்டுக்குப் பூரண ஒத்துழைப்பு வழங்குகின்றோம்.” – என்று ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

















