அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவு தேசியப் பூங்காவில் வசிக்கும் இலட்சக்கணக்கான சிவப்பு நண்டுகள் தங்களின் வருடாந்திர இனப்பெருக்கப் பயணத்தின் காரணமாகச் வீதிகளை ஆக்கிரமித்துள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இது ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடக்கும் ஒரு வினோதமான இயற்கை நிகழ்வாகும்.

இந்தச் சிவப்பு நண்டுகள் கிறிஸ்மஸ் தீவின் காட்டுப் பகுதிகளில் சிறிய குழிகளை அமைத்து வாழ்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இனப்பெருக்கப் பருவம் வரும்போது இலட்சக்கணக்கான ஆண் மற்றும் பெண் நண்டுகள் காட்டில் இருந்து வெளியேறி கடற்கரையை நோக்கிப் படையெடுக்கின்றன.
கடற்கரையில் ஆண் நண்டுகள் குழிகளை அமைக்க, பெண் நண்டுகள் அவற்றில் முட்டைகளை இட்டு சுமார் இரண்டு வாரங்கள் அடைகாக்கின்றன. நவம்பர் மாதத்தின் மத்தியில் முட்டைகளில் இருந்து வெளிவரும் குட்டி நண்டுகள் கடலுக்குள் செல்கின்றன. இவை கடல் அலைகளில் சுமார் ஒரு மாத காலம் தாக்குப்பிடித்த பிறகு இளம் நண்டுகளாக மீண்டும் கிறிஸ்மஸ் தீவிற்குத் திரும்புகின்றன.
தற்போது இனப்பெருக்கப் பயணத்தை மேற்கொண்டுள்ள நண்டுகள் தீவின் வீதிகளை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளதால் அந்த வழிகளில் மனிதப் போக்குவரத்து முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கிறிஸ்மஸ் தீவு தேசியப் பூங்காவின் பணிப்பாளர் அலெக்ஸா கூறுகையில்,
ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள் நண்டுகளின் இந்த அற்புதமான பயணத்திற்காகத் தங்களால் முடிந்த அளவு வீதிகளில் போக்குவரத்தைத் தவிர்த்துக் கொள்கின்றனர். இது ஒரு அருமையான அனுபவம். சிவப்பு நண்டுகள் ஒருபோதும் எங்களுக்குத் தொந்தரவாக இருந்ததில்லை.’ என்று தெரிவித்துள்ளார். இந்தப் பயணத்தின்போது நண்டுகள் பாதுகாப்பாகச் செல்வதற்காகத் தீவின் அதிகாரிகள் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்கின்றனர்.

















