இந்தியாவின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் இலங்கையின் மண் ஒருபோதும் பயன்படுத்தப்படாது என்ற இறையாண்மைக் கொள்கையை இலங்கை நிலைநிறுத்தி வருகிறது என்றும், இக்கொள்கை ‘புனிதமாக’ நிலைத்திருக்கும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதியளித்தார்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியஇ தான் கல்வி கற்ற புதுடெல்லி பல்கலைக்கழகத்தின் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘இந்துக் கல்லூரி இப்போது முதலிடத்திற்கு வந்துள்ளது. அது குறித்து பெருமைப்படுகிறேன். நான் முதன்முதலில் இங்கு வந்தபோது, PEPSI இந்தியாவிற்கு அப்போதுதான் வந்திருந்தது.
அந்தக் காலத்தில் அது ஒரு பெரிய விடயமாக இருந்தது. அந்தக் காலத்தில் நாங்கள் பேசிய விதம் நினைவிருக்கிறது. வகுப்பறைகளில் மட்டுமல்ல, குறிப்பாக வகுப்பறைக்கு வெளியே புல்வெளியில் அமர்ந்து, தேநீர் அருந்திக்கொண்டே பேசியிருந்தோம்.
இந்தியாவும் இலங்கையும் பாரம்பரியம், விழுமியங்கள் மற்றும் பரஸ்பர மரியாதை என்ற பொதுவான பாரம்பரியங்களால் பிணைக்கப்பட்டுள்ளன.
சில சமயங்களில் நாம் ஒருவருக்கொருவர் உடன்படாமல் இருக்கலாம். ஒருவருக்கொருவர் எல்லாவற்றையும் விரும்பாமலும் இருக்கலாம். அதுதான் ஒரு குடும்பத்தின் இயல்பு.
உண்மையான உறவுகள் அப்படித்தான் இருக்கும். நீங்கள் எப்போதும் ஒன்றாக வேலை செய்யவும், வாழவும் கற்றுக்கொள்கிறீர்கள். நாள் முடிவில் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துகிறீர்கள்.
இந்தியா எப்போதும் இலங்கையின் பயண வழியில் மாறாத பங்காளியாக இருந்து வருகிறது. எமது பொருளாதார மீட்சிக்கு ஆதரவளித்து, நெருக்கடியான காலங்களில் அத்தியாவசிய உதவிகளை வழங்கி, நாங்கள் ஸ்திரத்தன்மையையும் வளர்ச்சியையும் அடையும்போதும் எங்களுடன் நின்றது.
2022 ஆம் ஆண்டில் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டபோது, இந்தியா எமக்குக் கடன் வசதிகள், எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கியது. இவற்றை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம்.
அவை எங்கள் மக்களின் இதயங்களில் எழுதப்பட்டுள்ளன. இது வெறும் இராஜதந்திர ஆதரவு அல்ல. கடினமான நேரத்தில் எங்களுக்கு உதவிய ஒரு உண்மையான நண்பனின் உதவி.
இலங்கை தொடர்ச்சியாக ஒரே நிலைப்பாட்டில் உள்ளது. எமது பூமியை இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகப் பயன்படுத்த நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
தற்போதும் நாங்கள் அதே கொள்கையைத்தான் கடைப்பிடிக்கிறோம். இங்குள்ள அனைத்து மாணவர்களுக்கும் நான் கூறுவது, உங்களிடம் மகத்தான ஆற்றல் உள்ளது. நீங்கள் இந்துக் கல்லூரியில் பெறும் கல்வி ஒரு பரிசு.
அதே சமயம் ஒரு பொறுப்பும் கூட. அதை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துங்கள். பாலங்களைக் கட்ட அதைப் பயன்படுத்துங்கள், சுவர்களை எழுப்ப அல்ல. பாக் ஜலசந்தியின் ஊடாக தெற்கு திசையைப் பாருங்கள்.
இலங்கையை ஒரு அண்டை நாடாக மட்டும் பார்க்காமல், ஒரு பங்காளராகவும் பாருங்கள். நாங்கள் எண்ணங்கள் நிறைந்த ஒரு நாடு, அதேபோல் தியாக மனப்பான்மை மற்றும் தைரியமான மக்கள் உள்ள நாடு.’ என்றார்.


















