டித்வா சூறாவளி வந்து ஒரு மாதத்தை நெருங்கும் நிலையில் கண்டி மீமுரே கிராமத்தில் சுமார் 400 குடும்பங்கள் இன்றும் இருளிலும் வெளித் தொடர்புகள் அற்ற நிலையிலும் இருப்பதாக கண்டியிலுள்ள சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மீமுரே கிராமத்தில் சுமார் 400 குடும்பங்களுக்கு நேற்று வரை மின்சாரம் கிடைக்கவில்லை. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஹெலிகொப்டர்கள் மூலம் வழங்கப்பட்டது.
கடந்த நவம்பர் 27 ஆம் திகதி சூறாவளியின் தாக்கத்தால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அது சீரமைக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக புனரமைக்கப்பட்டு வந்த வீதி மீண்டும் சேதமடைந்தது.
இதனால் பாதிக்கப்பட்ட சுமார் 400 குடும்பங்கள் தங்கள் வீடுகளில் முடங்கியுள்ளன. மேலும் அவர்களுக்கு டோச்கள், பற்றரிகள் போன்றவற்றை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்களுக்கு தேவையான பொருட்கள் ஹெலிகொப்டர்கள் மூலம் வழங்கப்பட்டு வருவதாக அந்த அதிகாரி கூறினார்.
அரசு அதிகாரிகள் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கால்நடையாகவே எடுத்துச் செல்வதாகவும், ஒரு டிராக்டர் செல்லக் கூடிய வகையில் வீதியை விரைவாகத் தயார்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


















