-நாளொன்றுக்கு 100 நோயாளிகளாம்-
இலங்கையில் நாள் ஒன்றுக்கு 100 புதிய புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்படுவதாகவும், அவர்களில் 40 நோயாளிகள் உயிரிழப்பதாகவும் தேசிய புற்றுநோய் தடுப்பு வேலைத்திட்டத்தின் சமூக மருத்துவ நிபுணர் ஹசாலி பெர்னாண்டோ தெரிவித்தார்.
பெப்ரவரி 4ஆம் திகதி அனுஷ;டிக்கப்படும் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில், ‘மாற்றங்கள் மூலம் இணைவோம்’ என்பதே இந்த ஆண்டு புற்றுநோய் தின கருப்பொருளாகும்.
உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் உலகில் 20 மில்லியன் புதிய புற்றுநோயாளிகள் பதிவாகியுள்ளனர். புற்றுநோய் தொடர்பான மரணங்களின் எண்ணிக்கை 10 மில்லியனாக உள்ளது.
2022 ஆம் ஆண்டில் இலங்கையில் 35,855 புதிய புற்றுநோயாளிகள் பதிவாகியுள்ளனர். 2021 ஆம் ஆண்டில் புற்றுநோய் காரணமாக 14,986 மரணங்கள் பதிவாகியுள்ளன. புதிதாக பதிவாகும் புற்றுநோயாளிகளில் சுமார் 19,500 பேர் பெண்களும், 16,400 பேர் ஆண்களும் என மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


















