நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இஸ்ரேலிய பிரஜை ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக என நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாவலப்பிட்டி மல்லாந்த சந்தியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கெப் வண்டியொன்றும் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டது.
பொலிஸாரின் தகவலின்படி, காயமடைந்த இஸ்ரேலியப் பிரஜை தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளார். இவர்கள் வெலிகமவிலிருந்து வாடகைக்கு எடுத்த மூன்று மோட்டார் சைக்கிள்களில் கண்டி மற்றும் நுவரெலியா வழியாக எல்லவுக்கு பயணித்துக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், இஸ்ரேலிய பிரஜை பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து கெப் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்தில் பகாயமடைந்த இஸ்ரேலியப் பிரஜை நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நாவலப்பிட்டி பொலிஸார் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


















