இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இஸ்ரேலில் வீட்டு அடிப்படையிலான பராமரிப்பாளர் பணிகளுக்காக 2026 ஆம் ஆண்டில் 1,000 இலங்கையர்களை வேலைக்கு அமர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் இஸ்ரேல் அரசாங்கங்களுக்கு இடையிலான நேரடி உடன்படிக்கையின் கீழ் இந்த வேலைவாய்ப்புத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
2026 ஆம் ஆண்டின் முதல் இரண்டு வாரங்களில் மாத்திரம் 107 பராமரிப்புப் பணியாளர்கள் இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 2,656 இலங்கையர்கள் இஸ்ரேலில் பராமரிப்புப் பணிகளைப் பெற்றுள்ளனர்.
விண்ணப்பதாரர்கள் 25 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களாகவும், க.பொ.த சாதாரண பரீட்சைக்குத் தோற்றியிருக்க வேண்டும்.
அத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பராமரிப்பாளர் பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது செவிலியர் துறையில் குறைந்தது 11 மாத அனுபவம் இருக்க வேண்டும்.
மேலும் ஆங்கில மொழியில் சிறந்த தேர்ச்சி பெற்றிருப்பதுடன், பணியகத்தினால் நடத்தப்படும் ஆங்கில மொழிப் பாடநெறியை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
இந்தநிலையில் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு 5 ஆண்டுகள் செல்லுபடியாகும் விசா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மாதாந்த வேதனமாக 600,000 ரூபாவிற்கும் அதிகமான தொகையை ஈட்ட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


















