சுயவிருப்பத்தின் அடிப்படையிலான ஓய்வுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள், தேவைப்படின் இன்று 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் குறித்த விண்ணப்பங்களை மீளப் பெற விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் கே.எஸ்.ஐ. குமார, அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
வலுசக்தி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட இலக்கம் MOE/SRS/VRS/28 மற்றும் 2025.11.14 திகதியிட்ட கடிதத்திற்கு அமைய, 2025 ஒக்டோபர் 27 ஆம் திகதிக்கு முன்னர் சுயவிருப்ப ஓய்வுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்தாலும், அவ்விண்ணப்பங்களை மீளப் பெற்றுக்கொண்டு புதிய நிறுவனத்துடன் இணைய உத்தேசித்துள்ள இ.மி.ச. ஊழியர்களுக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.
இன்றையதினமே இறுதிநாளாகும். இதன் பின்னர் விண்ணப்பங்களை மீளப் பெற சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என்பதுடன், அக்கோரிக்கைகள் அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


















