மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், தற்போதைய அரசாங்கம் இரகசியமான முறையில் சில சர்வதேச ஒப்பந்தங்களைச் செய்துள்ளதா என கேள்வியெழுப்பியுள்ள நாமல் ராஜபக்ஷ எம்.பி. ஈரான் கப்பல் மீதான தாக்குதல் அத்தகைய ஒப்பந்தங்களின் விளைவா என்பதை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பி மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஈரானியக் கப்பலொன்று இலங்கையின் பிரத்யேகப் பொருளாதார மண்டலத்திற்குள் தாக்குதலுக்குள்ளானதாகத் தகவல்கள் வருகின்றன. நாட்டின் கடல் எல்லைக்குள் இவ்வாறான தாக்குதல் எப்படி நடந்தது? இது புலனாய்வுப் பிரிவின் பலவீனத்தையே காட்டுகிறது.
மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், தற்போதைய அரசாங்கம் இரகசியமான முறையில் சில சர்வதேச ஒப்பந்தங்களைச் செய்துள்ளதா என்ற கேள்வியெழுகின்றது. இந்தக் கப்பல் தாக்குதல் அத்தகைய ஒப்பந்தங்களின் விளைவா என்பதை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தால் இலங்கையின் சுற்றுலாத்துறை, தேயிலை ஏற்றுமதி மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் வருமானம் ஆகியவற்றுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முகங்கொடுக்க அரசாங்கத்திடம் முறையான திட்டம் உள்ளதா என கேட்கின்றேன்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கைகளை மறைத்தவர்களைப் பாதுகாப்பதற்காகவே, தற்போது புலனாய்வுப் பிரிவினர் வேட்டையாடப்படுகின்றனர்.பயங்கரவாதத்தை ஒழிக்கப் பாடுபட்டவர்களைச் சிறையிலடைப்பதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
நாட்டின் கௌரவம் மற்றும் பாதுகாப்பு குறித்த நீண்டகாலத் தொலைநோக்குத் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை. குறுகிய கால அரசியல் லாபங்களை விடுத்து நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைத்தன்மை குறித்து சிந்திக்குமாறு அரசாங்கத்தைக் கோருகின்றேன் என்றார்.


















