நாட்டின் ஜனநாயகத்திற்கான தூண்களில் ஒன்றாக விளங்கும் ஊடகத்தினருக்காக ‘மூன்றாவது கண்ணுக்கு சிகிச்சை’ எனும் தொனிப்பொருளிலான சிறப்பு கண் சிகிச்சை முகாம் சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சு மற்றும் கொழும்பு தேசிய கண் மருத்துவமனை இணைந்து இன்றைய தினம் கொழும்பு தேசிய கண் மருத்துவமனை வளாகத்தில் நடத்தப்பட்டது.
சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்கவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தேசிய கண் மருத்துவமனையின் இயக்குனர் வைத்தியர் ஜயருவன் பண்டார, வைத்தியர் அஹமட் ஜஸா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இம்முகாமில் ஊடகத்தினருக்கு இலவசமாக FBS சர்க்கரை நோய் பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனை, கண் பரிசோதனை மற்றும் கண்ணாடிகளும் வழங்கிவைக்கப்பட்டது.
சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தனது உரையில், ‘கண்பார்வை இழப்பிற்கு முக்கிய காரணமான விழித்திரை நோயை அகற்றுவதில் சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது’ என்று குறிப்பிட்டார்.
இந்த சிறப்பு மருத்துவ முகாமை சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சு, தேசிய கண் மருத்துவமனை மற்றும் இலங்கை கண் மருத்துவர்கள் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்வில் நாட்டின் பல்வேறு ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த பல ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டு மருத்துவ சேவைகளைப் பெற்றுக் கொண்டனர்.


















