-பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன வலியுறுத்தல்-
சம்பள விவகாரத்தை முன்னிலைப்படுத்தி இதுவரை காலமும் செய்த அரசியல் முடிவடைவதை எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் விரும்பவில்லை. இதனால் தான் 200 ரூபா சம்பள அதிகரிப்பை எதிர்க்கிறார்கள். எதிர்க்கட்சியின் உறுப்பினர்களின் கருத்தை பெருந்தோட்ட மக்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட் டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டிய பொறுப்பு சகல தரப்பினருக்கும் உண்டு.
வரவு செலவுத் திட்டத்தில் மலையக மக்களுக்கு 200 ரூபா சம்பளம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதை எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சவாலுக்குட்படுத்துகிறார்கள். மலையக மக்களின் சம்பள விவகாரத்தை முன்னிலைப்படுத்தி இதுவரை கால மும் செய்த அரசியல் முடிவடைவதை எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் விரும்பவில்லை.
இதனால் தான் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எதிர்க்கிறார்கள். இந்த சம்பள அதிகரிப்பு பற்றி எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றினார். இந்த சம்பள அதிகரிப்புக்கு தாம் எதிர்ப்பு இல்லை என்றார். எதிர்க்கட்சியின் முறையற்ற கருத்துக்களைத் தொடர்ந்து பெருந்தோட்ட மக்கள் எதிர்க்கட்சியின் உறுப்பினர்களுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
கோயிலில் பூஜை செய்து, தேங்காய் உடைத்தார்கள். நேர்த்தி வைத்தார்கள் இதற்கு அச்சமடைந்து எதிர்க்கட்சியின் உறுப்பினர் இவ்வாறு கருத்து தெரிவித்தாரா? என்பது தெரியவில்லை. பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம். இந்த சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் ஒருமித்த நிலைப்பாடு இல்லை என்பது தெளிவாக விளங்குகிறது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் எவரையும் ஜனாதிபதி புறக்கணிக்கவில்லை. பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நிதி நிலைமையை ஸ்திரப்படுத்திக் கொண்டு வரவு – செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.


















