விசேட அனுமதி தவிர்ந்து, ஏனைய எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மரக்கறிகள் இறக்குமதி செய்யப்படமாட்டாது என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
அதன்படி, வானூர்தி சேவை போன்ற சில நிறுவனங்களுக்கு குளிரூட்டப்பட்ட மரக்கறிகளை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதியை தவிர, வேறு எந்த தரப்பினருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
முன்னதாக, டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தங்களை அரசாங்கம் தங்களுக்கு சாதகமான பயன்படுத்தி, மரக்கறியை இறக்குமதி செய்வதாக தேசிய விவசாயிகள் ஒற்றுமை அமைப்பின் தலைவர் அனுராத தென்னகோன் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
நுவரெலியா, கண்டி, பண்டாரவளை, பதுளை மற்றும் மாத்தளை உள்ளிட்ட சில முக்கிய பிரதேசங்களில் போதுமான மரக்கறி செய்கை முன்னெடுக்கப்படுகிறது.
இருப்பினும், பண்டிகைக்காலத்தில் எதிர்பார்க்கப்படும் பற்றாக்குறையை காரணம் காட்டி, மரக்கறியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தனிப்பட்ட இலாபத்தை நோக்கமாகக்கொண்டு, மரக்கறியை இறக்குமதி செய்வதற்கு வர்த்தக அமைச்சு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், இந்த நடவடிக்கை தொடருமாயின், இறுதியில் உள்ளுர் மரக்கறி செய்கை வீழ்ச்சியடையும் எனவும் எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மரக்கறிகள் இறக்குமதி செய்யவதற்கான திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டார்.
டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக நாட்டின் வடக்கு முதல் தெற்கு வரையான விவசாயம் காணிகள் பாதிக்கப்பட்டன. இருப்பினும், வயல்கள் உள்ளிட்ட சில விவசாய காணிகள் மீண்டும் பயிர்ச்செய்கையினை மேற்கொள்ளக்கூடிய நிலையில் உள்ளன.
இதன்காரணமாக, குளிரூட்டப்பட்ட மரக்கறிகளை இறக்குமதி செய்வதற்கு அவசியமில்லை எனவும் மேலும் தெரிவித்தார்.


















