சர்வதேச ரீதியில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக, அஞ்சல் விநியோக நடவடிக்கைகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் முன்னெடுப்பதற்கு அஞ்சல் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி அஞ்சல் மா அதிபர் பிரேமச்சந்திர ஹேரத் தெரிவித்தார்.
புதிய தீர்மானத்திற்கு அமைய, கொழும்பிலிருந்து நீண்ட தூரப் பகுதிகளுக்கான அஞ்சல் விநியோகங்கள் ஞாயிற்றுக்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் மாத்திரம் நடைபெறும்.
இந்த நடைமுறை கொழும்பிலிருந்து பின்வரும் நகரங்களை நோக்கிய விநியோகங்களுக்குப் பொருந்தும். அதன்படி, கொழும்பிலிருந்து வவுனியா ஊடாக யாழ்ப்பாணம், கொழும்பிலிருந்து பொலன்னறுவை ஊடாக மட்டக்களப்பு, கொழும்பிலிருந்து பதுளை, கொழும்பிலிருந்து கண்டி ஆகிய இடங்களுக்கு பொருந்தும்.
இதேவேளை, நீண்ட தூரப் பிரதேசங்களிலிருந்து கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கான அஞ்சல் விநியோகங்களும் இதே அடிப்படையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


















