-பா.சதீஸ்-
ஒட்டுசுட்டானில் காணாமல் போன 14 வயது சிறுவன் கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மருத்துவப் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒட்டுசுட்டான் இடதுகரை, முத்தையன்கட்டு, பிரதேசத்தை சேர்ந்த அசோக்குமார் அரவிந்தன் (வயது-14) என்ற சிறுவன் கடந்த 5 ஆம் முதல் காணாமல் போயுள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
அன்றையதினம் வீட்டிலிருந்து வலதுகரையில் உள்ள கடை ஒன்றிற்கு பொருட்கள் வாங்கச் சென்றிருந்த நிலையில் அவர் வீடு திரும்பியிருக்கவில்லை. சிறுவன் குறித்த கடையில் பொருட்கள் வாங்கிச் செல்லும் சிசிரிவி காட்சிகள் பதிவாகியிருந்தது.
இந்நிலையில் காணாமல் போன சிறுவன் பொழும்பில் நிற்பதாக கொழும்பில் உள்ள உறவினர்கள் குடும்பத்தாருக்கு தகவல் கொடுத்த நிலையில் சிறுவன் உறவுகளால் அழைத்து வரப்பட்டு ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய நிலையம் ஊடாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவப் பரிசோதனைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் சிறுவனின் ஆரோக்கிய நலன் கருதி மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சிறுவனை யாரும் கடத்தவில்லை எனவும் சிறுவன் வேலை தேடி சென்றதாகவும் சிறுவனால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















