பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலத்திற்கு நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான மேற்பார்வைக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக தலைமையில் நேற்றுமுன்தினம்,மேற்படி குழு பாராளுமன்றில் கூடியபோதே இந்த அனுமதி கிடைத்துள்ளது. ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் 2026ஆம் ஆண்டு பெப்ரவரி 17ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
உத்தேச சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், சட்டமூலத்தின் 3 ஆம் பிரிவிற்கு அமைய, இச்சட்டம் நடைமுறைக்குவரும் தினத்துக்கு முன்னதாக ஓய்வூதியமொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு உரித்துடைய மற்றும் ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கு, இச்சட்டம் நடைமுறைக்கு வரும் தினத்தில் இருந்து ஓய்வூதியம் நிறுத்தப்படும். இக்குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சந்தன சூரிஆராச்சி, தர்மப்பிரிய விஜேசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.


















