இலங்கையின் கடந்தகால பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காண்பது அவசியம். ஓருவேளை தீர்வினைக் காணத் தவறினால் மீண்டும் இந்த நாட்டில் யுத்தம் உருவாகாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என கூறியுள்ள இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் பீலிக்ஸ் நியுமான், இதனை எங்கள் அனுபவத்தின் ஊடாக கூறுகிறோம் எனவும் கூறியுள்ளார்.
பாத்பைன்டர் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வட்டமேசை அமர்விலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பது, நீதித்துறை நடவடிக்கைகளுக்கு அப்பால், நீதித்துறை கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத ஒரு செயல்பாட்டு அதிகாரத்தை அனுமதிக்கும் ஒரு சட்டமாகும். இது சர்வதேசத் தர நிலைகளைப் பூர்த்தி செய்யவில்லை. ஜெர்மனி இணை அணுசரனை நாடுகள் குழுவிலிருந்து விலகவில்லை. ஜெனீவாவில் ஒரு சுழற்சி முறை உள்ளது.
நாங்கள் இந்த விடயத்தைத் தொடர்ந்து கவனிக்கிறோம். சட்டத்தின் ஆட்சி என்பது பொறுப்புக்கூறலையும் குறிக்கிறது என்பது எங்கள் கருத்தின் ஒரு பகுதியாகும். அது நல்லிணக்கத்தையும் குறிக்கிறது. அது சிறுபான்மையினரின் பாதுகாப்பையும் குறிக்கிறது.
தேசிய நல்லிணக்கம் தவிர்க்க முடியாதது. அது முக்கிய கடமை. கடந்தகாலப் பிரச்சினைகளை நீங்கள் கையாளாவிட்டால், நீங்கள் ஒரு நாடாக நீண்ட காலம் வாழலாம், ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக ஒரு நெருக்கடி வரும்போது, இந்த பழைய மோதல்கள் மீண்டும் எழக்கூடும்.
ஜேர்மன் அனுபவம் இதனை எடுத்துக் காட்டுகிறது. இது உங்கள் உடலில் உள்ள ஒரு வைரஸ் போன்றது. உடல் வலுவாக இருக்கும்போது, அதைப் பற்றி அதிகம் யோசிக்க மாட்டீர்கள், அது கட்டுப்பாட்டிற்குள் இருக்கும், ஆனால் எல்லா இடங்களிலும் அதைக் கட்டுப்படுத்த முடியாது.
எங்களுடைய பார்வையில் இதன் அடித்தளங்களில் ஒன்று பயங்கரவாதத் தடைச்சட்டமாகும். பயங்கரவாத தடைச்சட்டம் என்பது, நீதித்துறை நடவடிக்கைகளுக்கு அப்பால், நீதித்துறை கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத ஒரு செயல்பாட்டு அதிகாரத்தை அனுமதிக்கும் ஒரு சட்டமாகும்.
இது சர்வதேசத் தரநிலைகளைப் பூர்த்தி செய்யவில்லை. இதை மறுபரிசீலனை செய்து சர்வதேசத் தர நிலைகளுக்கு இணங்கக் கொண்டுவருவதாக அரசாங்கம் அறிவித்திருப்பதைக் கண்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். ஜேர்மனி உட்பட பல நாடுகளிடம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் உள்ளன,
ஆனால் இதற்கு ஒரு சர்வதேசத் தரம் உள்ளது என்றார்.


















