கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் (Arrival Terminal) அமைக்கப்பட்டுள்ள இலத்திரனியல் நுழைவாயில்கள் (E-Gates) நேற்று புதன்கிழமை முதல் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்தது.
இது தொடர்பான மேலதிக விபரங்களை திணைக்களத்தின் தலைமை அதிகாரி ஜூட் பெர்னாண்டோ வெளியிட்டுள்ளார்.
விமான நிலைய வருகை முனையத்தில் நான்கு இலத்திரனியல் நுழைவாயில்கள் இன்று முதல் பயணிகளின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படுகின்றன.
இந்த விசேட ‘இலத்திரனியல் நுழைவாயில்கள் ‘ (E-Gates) திட்டமானது ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய முறைமையின் ஊடாக விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு நடவடிக்கைகளின் வினைத்திறனை அதிகரிக்க முடியும் என தலைமை குடிவரவு அதிகாரி ஜூட் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வசதியானது பயணிகளின் ஆவணப் பரிசோதனைக்கான நேரத்தைக் குறைப்பதற்கும், விமான நிலைய நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கும் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


















