இலங்கை கல்வி நிர்வாக சேவை மூன்றாம் தரத்தில் தற்போது நிலவும் 1,500 க்கும் மேற்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி இலங்கை கல்வி நிர்வாக சேவை மூன்றாம் தரப் பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகள் குழு, தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த மனு பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன, நீதியரசர்கள் அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு முன் விசாரிக்கப்பட்டது. சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மூத்த அரச சட்டவாதி சுரேகா அஹ்மத், தனது சிரேஷ்ட சட்டவாதி ஆஜராக முடியாததால், வேறு திகதியைக் கோரியதாக நீதிமன்றத்திடம் தெரிவித்தார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதியரசர்கள் குழு, மனுவை பெப்ரவரி 23 ஆம் திகதி பரிசீலிக்க உத்தரவிட்டது.
இலங்கை கல்வி நிர்வாக சேவையின் மூன்றாம் தரத்துக்கான தேர்வு செப்டெம்பர் 21, 2023 அன்று நடத்தப்பட்டதாகவும் தாமும் அதற்கு ஆஜராகி 735 பரீட்சார்த்திகள் தேர்ச்சிப் பெற்றதாகவும் மனுதாரர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், இந்தப் பரீட்சையில் கலந்துகொண்ட சில பரீட்சார்த்திகள் இதற்குத் தகுதியற்றவர்கள் என்று சுட்டிக்காட்டும் மனுதாரர்கள், இந்தத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகக் கூறுகின்றனர்.
எனவே, தொடர்புடைய பரீட்சையை இரத்துச் செய்து மீண்டும் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் இந்த மனு விசாரிக்கப்பட்டு இறுதி முடிவு அறிவிக்கப்படும்வரை அதனுடன் தொடர்புடைய வெற்றிடங்களை நிரப்புவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தை மேலும் கோரியுள்ளனர்.


















