கொத்மலை நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரப்பியவரை உடனடியாக கண்டுபிடிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆலோசனை விடுத்துள்ளார்.
கொத்மலை மற்றும் மொரகஹகந்த நீர்த்தேக்கங்களின் அணைகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக வதந்தி ஒன்று பரவியுள்ளது. ஆனால் அந்த விடயம் உண்மையும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. மழையினால் நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு 2 அடி திறக்கப்பட்டுள்ளதாகவும், அதனூடாக வினாடிக்கு 80 கனமீற்றர் நீர் வெளியேற்றப்படுவதாகவும் நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பிலுள்ள பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்படுவதற்கு முன்னர் சைரன் ஒலி எழுப்பப்பட்டதாகவும், இது சாதாரண நிலைமை என்றும் அவர் தெரிவித்தார்.
கொத்மலை அணை உடைந்ததாகவும், அதனால் அணைக்குக் கீழ்ப்பகுதியில் வாழும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பரவி வந்தது. இதன் காரணமாக குறித்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தற்போது மேடான பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். ஆனால் கொத்மலை நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டில் எந்தப் பாதிப்பும் இல்லை என்று உறுதிப்படுத்தியதையடுத்து, குறித்த பொய்யான வதந்தியைப் பரப்பிய நபரை உடனடியாகக் கண்டுபிடிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.


















