ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு இந்நாட்டு மக்களின் சொத்துக்களை சூறையாடிய அரசியல்வாதிகளுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது. சட்டத்தின் பிடிக்குள் இருந்து அவர்கள் தப்பவே முடியாது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
யாழ். கொழும்பு இறங்குதுறையின் புனரமைப்பு பணிகள் நேற்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டை அபிவிருத்தி செய்யும் அதேவேளை, யாழ். மாவட்டத்தையும் கட்டியெழுப்புவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இங்கு வாழும் மக்களுக்கு வருமானம் கிடைக்கக்கூடிய வழிமுறைகள் உருவாக்கப்படும். குறிப்பாக யாழ். மாவட்டத்தில் ஒதுக்கப்பட்டிருந்த பகுதிகளும் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றன.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலின் போது தமிழ் மக்கள் எமக்கு பேராதரவை வழங்கினர். உள்ளுராட்சி சபைத் தேர்தலின் போதும் உரிய அங்கீகாரம் கிடைக்கப்பெற்றது என்றே சொல்ல வேண்டும். இப்பிரதேசம் எமக்கு முக்கியம். அதனை மேம்படுத்த நடவடிக்கை எடுப்போம். நாம் இவ்வாறு அபிவிருத்தி நோக்கி பயணித்துக்கொண்டிருக்கையில் ஒரு சில அரசியல் பூச்சாண்டிகள் விசமத்தனமான கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்நாட்டில் இலஞ்ச, ஊழல் மோசடிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். இதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை.
இந்நாட்டு மக்களின் சொத்துக்களை சூறையாடிய, வளங்களைக் கொள்ளையடித்த நபர்களுக்கு மன்னிப்பு கிடையாது எனத் தெரிவித்தார்.

















