-பாட்டலி சம்பிக்க ரணவக்க-
சர்வதேச நாணய நிதியத்தின் சேவை எமக்கு இப்போது தேவையில்லை என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்தின் சேவை இரு காரணங்களுக்காக எமக்கு தேவைப்பட்டது. ஒன்று நாட்டில் காணப்பட்ட முறையற்ற நாணய பயன்பாடு.அதனால் நாணய ஒழுக்கத்தை ஏற்படுத்துவதற்கும் கடனை மறுசீரமைப்பு செய்து செலுத்துவதற்கும் தேவைப்பட்டது. அதை அவர்கள் சரியாக செய்தார்கள்.
அது இப்போது முடிந்துவிட்டது. ஆனால் இந்த அரசாங்கம் அதை மாற்றுவதாக வந்தார்கள் செய்யவில்லை. மேலும் நாம் பெற்ற கடன்களை செலுத்துவோம் என உறுயளிப்பதற்கு ஒரு சாட்சியாளராக நின்றது. இந்த செயற்பாடுகள் நிறைவடைந்துள்ளன. அதனால் நாம் சர்வதேசத்துடன் இணைந்து பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு திட்டங்களை செயற்படுத்த வேண்டும்.
எமது தேசிய கடன் சுமை 66 பில்லியன் டொலர் ஆகும்.மேலும் வெளிநாட்டு கடன் சுமை 37 பில்லியன் டொலர், திறைசேரி பத்திரங்களில் பெற்ற கடன்கள் 12 பில்லியன் டொலர், திறைசேறி உண்டியல்களில் 50 பில்லியன் டொலர்களாக உள்ளன.
ஒவ்வொரு வருடமும் வரவு செலவுத் திட்டங்களிலும் நாம் கடன் பெற்றுக் கொண்டே நாட்டை வழிநடத்தி செல்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.


















