இன்றைய நாளுக்கான நாடாளுமன்ற அமர்வுகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளன.
2025 ஆண்டின் செப்டெம்பர் மாத இரண்டாவது நாடாளுமன்ற அமர்வு இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் எதிர்வரும் 26ஆம் திகதி வரை தொடர்ச்சியாக கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
நாடாளுமன்றம் கூடும் ஒவ்வொரு நாளும் காலை 9.30 முதல் 10 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து காலை 10 மணி முதல் 11 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், காலை 11 மணி முதல் 11.30 மணிவரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை11.30 மணி முதல் மாலை 5 மணி வரை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு விவாதத்தை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்கான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் நாளைய தினம் காலை 11.30 மணி முதல் மாலை 5 மணி வரை தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீடு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















