-உரிமையாளருக்கு 50 ஆயிரம் தண்டம்-
-பா.சதீஸ்-
முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய ஒரு உணவகம் திடீர் சோதனையின் போது கண்டறியப்பட்டதையடுத்து அதிகாரிகளால் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டதுடன், உரிமையாளருக்கு 50 ஆயிரம் ரூபா தண்டமும் நேற்றையதினம் விதிக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட விசுவமடு பகுதியில் கடந்த 5 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, உடையார்கட்டு பொதுச் சுகாதார பரிசோதகர் பிரதாஸ் மற்றும் வள்ளிபுனம் பொதுச் சுகாதார பரிசோதகர் றொய்ஸ்ரன் ஜோய் ஆகியோர் இணைந்து குறித்த உணவகத்தினை பரிசோதித்தனர்.
சோதனையின் போது மருத்துவ சான்றிதழ் இல்லாமை, உணவக அனுமதிப் பத்திரம் இன்மை, தொழிலாளர்கள் முகச் சவரம் செய்யாமை, தண்ணீர் பகுப்பாய்வு சான்றிதழ் இன்மை, கழிவுத் தொட்டி இல்லாமை, அனுமதி பெறாமை போன்ற பல்வேறு சுகாதாரக் குறைபாடுகள் காணப்பட்டன. மேலும், வெற்றிலை மென்றவாறு உணவு கையாண்டல் போன்ற கடுமையான சுகாதார மீறல்களும் பதிவாகியிருந்தன.
இந்நிலையில், குறித்த விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக உடையார்கட்டு பொது சுகாதார பரிசோதகர் பிரதாஸ் மற்றும் வள்ளிபுனம் பொதுச் சுகாதார பரிசோதகர் றொய்ஸ்ரன் ஆகியோர் இணைந்து நேற்று வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர்.
வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றம் உரிமையாளர்களை குற்றவாளிகளாக இனங்கண்டு, உணவகத்தை சுகாதார சீர்கேடுகள் நிவர்த்தி செய்யும் வரை மூடுமாறு உத்தரவிட்டதுடன், உரிமையாளருக்கு 50 ஆயிரம் ரூபா தண்டம் விதித்ததுடன் எதிர்காலத்தில் இதுபோன்ற மீறல்கள் இடம்பெறாதவாறு கடுமையான எச்சரிக்கையும் வழங்கப்பட்டது.


















