-கூறுகிறார் சரத் வீரசேகர-
சுரேஷ் சலே, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை தேசதுரோக செயற்பாடாகும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் சரத் வீரசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்:-
ஆரோக்கியமாக இருந்த அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவை அரசாங்கம் திட்டமிட்டு நோயாளியாக்கியுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்டிருந்த பிரத்தியேக சிகிச்சை அறை தற்போது பொதுமக்கள் பாவனைக்காக வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்தை இல்லாதொழித்து, புலிகள் அமைப்பை அழிப்பதற்கு சுரேஷ் சலே அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார். ஆகவே ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்ட அறையை சுரேஷ் சலேவுக்கு வழங்க வேண்டும். அவருக்கு அரச செலவில் சிகிச்சையளிக்க வேண்டும்.
பயங்கரவாத்தை முற்றாக அழிக்க ஒத்துழைப்பு வழங்கிய சுரேஷ் சலே, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை தேசதுரோக செயற்பாடாகும்.
புலம்பெயர் விடுதலை புலிகள் அமைப்புக்களை திருப்திப்படுத்துவதற்காகவே சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்படுகிறார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவங்களுக்கும், சுரேஷ் சலேவுக்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது. குண்டுத்தாக்குதல் பற்றி விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, தெரிவுக்குழுக்களில் சுரேஷ் சலேவின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
குண்டுத்தாக்குதல் பற்றி முழுமையான புலனாய்வுத் தகவல்கள் தொடர்ச்சியாக கிடைத்தும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தான் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. பயங்கரவாதி சஹ்ரானை கைது செய்யவுமில்லை. அவ்வாறாயின் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


















