டித்வா சூறாவளியால் ஏற்பட்ட மண்சரிவுகள் காரணமாக இலங்கையின் மலைநாட்டுப் புவியியலில் சில பகுதிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், நிலப் பயன்பாட்டு வரைபடத் தொடரை மறுசீரமைக்க வேண்டியது அவசியம் என நில அளவையாளர் நாயகம் என்.கே.யு. ரோஹன தெரிவித்தார்.
பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த மறுவரை படமாக்கல் அவசியமாகிறது. துல்லியமான மறுவரை படமாக்கல் செயல்முறையை ஆதரிக்கும் வகையில், இலங்கையைச் சுற்றிவரும் விண்வெளி நிலையங்களில் இருந்து உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்களைப் பெற நில அளவைத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
இந்தப் புதிய படங்கள், மண்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அடையாளம் காணவும், நதிப் படுகைகள், நிலங்கள் மற்றும் விவசாயப் பகுதிகளில் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடவும் உதவும். ‘சேதம் பெரும்பாலும் புவியியல் நிலப்பரப்பில்தான் ஏற்பட்டுள்ளது. வெளிப்புறப் பகுதிகள் பெரும்பாலும் பாதிக்கப்படவில்லை, ஆனால் சில பகுதிகளில் மீள்குடியேற்றம் தேவைப்படலாம்’ என ரோஹன கூறினார்.
அனர்த்த நிலை சீரடைந்து, ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள், பாலங்கள், வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகளின் பழுதுபார்ப்புப் பணிகள் முடிந்தவுடன், விரிவான செயற்கைக்கோள் படங்களைப் பெறுவது ஒரு முன்னுரிமையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
அடிப்படை செயற்கைக்கோள் படங்கள் இலவசமாகக் கிடைத்தாலும், உயர்தரமான, நெருக்கமான படங்களைப் பெற கணிசமானளவு நிதி தேவைப்படுகிறது.
திணைக்களம் ஏற்கெனவே அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் இருந்து குறைந்த தெளிவுத்திறன் கொண்ட பல படங்களைச் சேகரித்துள்ளதுடன், ஆரம்பக் கட்ட ஆய்வுகளையும் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.
















