டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, ‘சுரக்ஷா’ காப்புறுதி திட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்குவதற்கு இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் இணங்கியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இயற்கை அனர்த்தங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களிடமிருந்து 2025.11.26 முதல் 2025.12.31 வரையிலான காலப்பகுதியில் பெறப்பட்ட உரிமைகோரல்கள் மட்டுமே இதன்கீழ் பரிசீலிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழங்கப்படும் நிவாரணங்கள் இயற்கை அனர்த்தம் காரணமாக பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்களை இழந்த மாணவர்களுக்கு, வருமான வரம்பை கருத்திற் கொள்ளாமல் நன்மைகள் வழங்கப்படும். (அனர்த்தத்தினால் மரணம் நிகழ்ந்ததை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் அவசியம்).
காப்புறுதி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படா விட்டாலும், அனர்த்தத்தின் காரணமாக ஏற்பட்ட விபத்துகளுக்காக பெறப்பட்ட வெளிக்கள சிகிச்சை, மருந்துகள் மற்றும் பரிசோதனைகளுக்காக அதிகபட்சம் ரூபா 20,000 வரை நன்மைகள் வழங்கப்படும்.
2025.11.01 முதல் 2025.11.26 வரை நிகழ்ந்த சம்பவங்களுக்கான காப்புறுதி கோரிக்கை ஆவணங்கள் அனர்த்தத்தினால் அழிவடைந்திருந்தால், அதிபர் மற்றும் கிராம உத்தியோகத்தரின் பரிந்துரையின் கீழ் நன்மைகள் வழங்கப்படும். தனியார் மருத்துவமனை பற்றுச்சீட்டுக்கள் தொலைந்திருந்தால், அந்த நிறுவனத்தால் சான்றளிக்கப்பட்ட நகல்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அரசு மருத்துவமனை ஆவணங்கள் தொலைந்திருந்தால், நோயாளியின் விபரங்கள் அடங்கிய வைத்தியரின் பரிந்துரை கடிதம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அனர்த்தத்தினால் ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறியவர்களுக்கு, தற்போதுள்ள 90 நாட்கள் கால அவகாசத்துடன் மேலதிகமாக 60 நாட்கள் சேர்க்கப்பட்டு, மொத்தம் 150 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும.; (2025.11.01 – 2025.12.31 காலப்பகுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டியவர்களுக்கு மட்டும்).
ஆவணங்களை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டால், அதனை உறுதிப்படுத்த அதிபர் அல்லது கிராம உத்தியோகத்தரின் உறுதிப்படுத்தல் கடிதத்தை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.














