-அஞ்சலி செலுத்த சென்ற மகளுக்கு பேரதிர்ச்சி-
மொரட்டுவை, ராவத்தாவத்தை பகுதியில் அடக்கம் செய்யப்பட்டிருந்த பெண்ணொருவரின் உடலத்திலிருந்த நகைகளைத் திருடும் நோக்கில், சவப்பெட்டியைத் தோண்டிய மயான ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் 15 ஆம் திகதி காலமான 73 வயதுடைய பெண்ணொருவரின் உடல் ராவத்தாவத்தை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 22 ஆம் திகதி உயிரிழந்த பெண்ணின் மகள் தனது தாய்க்கு அஞ்சலி செலுத்துவதற்காக மயானத்திற்குச் சென்றபோது, மயான ஊழியர் உட்பட மூவர் அந்தப் புதைகுழியைத் தோண்டிக்கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அவர் அவர்களைக் கேள்வி எழுப்பியதையடுத்து, மூவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இது குறித்து மொரட்டுவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வழங்கிய வாக்குமூலத்தின்படி, உடலத்துடன் புதைக்கப்பட்டதாகக் கருதப்படும் நகைகளைத் திருடும் நோக்கிலேயே தாம் இந்த புதைகுழியைத் தோண்டியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், இந்த சம்பவத்தின் போது அவர்கள் மதுபானம் அருந்தியிருந்ததாகவும், குறித்த பெண் முன்னரே புதைக்கப்பட்டதாகத் தவறாகக் கருதி இந்தத் திட்டத்தைத் தீட்டியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும், உடலத்தில் இருந்த நகைகள் அனைத்தும் ‘இமிட்டேஷன்’ ரகப் போலியான நகைகள் என உயிரிழந்த பெண்ணின் மகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சந்தேநபர்கள் நகைகளைத் திருட முயன்றனரா அல்லது விலையுயர்ந்த சவப்பெட்டியைத் திருட முயன்றனரா என்பது குறித்தும், இதற்கு முன்னர் இவ்வாறான சம்பவங்கள் அங்கு இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்தும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொரட்டுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், தப்பிச் சென்றுள்ள ஏனைய இருவரையும் கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


















