நாட்டில் நான்கில் ஒரு பகுதியினர் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்களில் சுமார் 80 சதவீதமானோர் கிராமப்புறங்களில் வசிப்பதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் உபாலி பன்னிலகே குறிப்பிட்டார்.
இதன் காரணமாக கிராமிய வறுமையை ஒழிப்பதற்கே முதலிடம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அதற்கமைய, ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் வறுமைக்கான காரணங்களைக் கண்டறிந்து, சமூக அபிவிருத்தி சபையின் அனைத்துப் பிரதிநிதிகளும் இணைந்து அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.
அதேவேளை, தற்போது மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலகப் பொருளாதாரத்தில் ஒருவித தாக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 15 மாத காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரம் பலப்படுத்தப்பட்டதன் காரணமாக அந்தத் தாக்கத்தைக் குறைத்துக்கொள்ள முடிந்துள்ளதாக அவர் கூறினார்.
அவ்வாறு பொருளாதாரத்தைப் பலப்படுத்தியிருக்காவிட்டால், மீண்டும் ஒரு வரிசை யுகம் உருவாகியிருக்கும் என்றும் அமைச்சர் உபாலி பன்னிலகே மேலும் வலியுறுத்தினார்.


















