டித்வா பேரிடரினால் நுவரெலியா மாவட்டத்தில் 1421 ஹெக்டயர் மரக்கறி செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தலைமையிலான மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
டித்வா சூறாவளியால் விவசாயத் துறைக்கு ஏற்பட்ட சேதம் குறித்து ஆராய்வதற்கும் இது தொடர்பாக எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்குமான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று காலை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.
சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 1,421 ஹெக்டயர் காய்கறி பயிர்ச்செய்கைகள் சேதமடைந்துள்ளன. இந்த நிலையில் விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பயிர்கள் சேதமடைந்ததால் நுவரெலியா மாவட்டத்தில் காய்கறி அறுவடை சுமார் 25வீதம் குறைந்துள்ளதாக அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர்.
நுவரெலியா மாவட்டத்திற்கு நாளாந்த காய்கறி விநியோகத்தை மேற்கொள்ள முடிந்துள்ள போதும் நாளாந்த கேள்வியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நுவரெலியா மாவட்டத்தில் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், விலைகள் அதிகரித்துள்ளதாகவும் பரப்பப்படும் தவறான செய்தியே இதற்குக் காரணம் என்றும் அதிகாரிகள் ஜனாதிபதியிடம் மேலும் சுட்டிக்காட்டினர்.


















