பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் பிரதமர் கலேதா ஜியாவின் மகனுமான தாரிக் ரஹ்மான் மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் இடம்பெற்றது.
டாக்காவிலுள்ள பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பங்களாதேஷிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் தர்மபால வீரக்கொடியும் கலந்துகொண்டார்.
இதன் போது, முன்னாள் பிரதமரின் மறைவுக்காக இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை மக்கள் சார்பாக, துயரமடைந்த அவரது குடும்பத்தினருக்கும் பங்களாதேஷ் மக்களுக்கும் அமைச்சர் விஜித ஹேரத் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
மேலும், டாக்காவிலுள்ள பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டு, மறைந்த முன்னாள் பிரதமருக்கு அமைச்சர் விஜித ஹேரத் மரியாதையைச் செலுத்தினார்.


















