அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக நியமிப்பதற்கு தடையாக இருந்த நீதிமன்ற வழக்கு நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் அரச சேவை மற்றும் அரச சேவை அல்லாத பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அந்த வகையில், வயதெல்லை திருத்தம் செய்யப்பட்டு பரீட்சையை நடத்தி பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமரும் கல்வியமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாய் மூல விடைக்கான வினா நேரத்தில் சந்தன சூரிய ஆரச்சி எம்.பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த பிரதமர் மேலும் கூறுகையில்,
அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக நியமிக்க முடியும். அந்த வகையில் நாட்டில் மாகாண பாடசாலைகளில் நிலவும் தமிழ், சிங்கள, ஆங்கில மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சையை இடை நிறுத்தி இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த நீதிமன்ற வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் 40 வயது என்ற உச்ச வயது எல்லையை 45 ஆக இந்த சந்தர்ப்பத்திற்கு மட்டும் செல்லுபடியாகும் விதத்தில் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற வழக்கு நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு கடந்த மாதம் 20 ஆம் திகதி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
அந்த வகையில் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள வழக்குத் தீர்ப்பின்படி அரச சேவையில் உள்ள பட்டதாரிகள் மற்றும் அரச சேவையில் இல்லாத பட்டதாரிகளையும் வயதெல்லையை நிர்ணயம் செய்து ஆசிரிய சேவையில் இணைத்துக் கொள்வதற்கான வயதெல்லையை நிர்ணயம் செய்து தனித்தனியாக பரீட்சைகளை நடத்தி நிலவும் வெற்றிடங்களுக்காக ஆசிரியர் சேவையில் மூன்றாம் தரத்தில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன – என்றார்.


















