இரத்தினபுரி – ஹப்புகஸ்தன்னை, யுவதியின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக இரத்தினபுரி வேவல்வத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
ஹப்புகஸ்தென்ன கீழ் இறத்கங்க பிரிவைச் சேர்ந்த 20 வயதுடைய மோகன்ராஜ் பேபி ஷானி என்ற யுவதியே நீர்த்தேக்கத்திலிருந்து கடந்த சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.
இது குறித்து வேவல்வத்தை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸாரும் பிரதேச மக்களும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில் இரத்தினபுரி குடுகல்வத்தை பகுதியில் நேற்று பிற்பகல் பிரதேச மக்கள் சந்தேக நபரைக் கண்டுள்ளனர்.
பிரதேச மக்கள் தம்மை அடையாளம் கண்டதைத் தொடர்ந்து இப்பகுதியிலுள்ள மதஸ்தலத்திற்கு ஓட முயற்சி செய்தபோது சந்தேக நபரை மக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.
அதன் பின்னர் சந்தேக நபரை வேவல்வத்தை பொலிஸார் கைது செய்தனர்.
கைதுசெய்யப்பட்டவர், மேலதிக விசாரணைகளுக்காக இரத்தினபுரி காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், குறித்த யுவதியின் சடலம் பிரேதப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க யுவதியின் சடலத்தைப் பொதுமக்கள் கண்டுபிடித்ததன் பின்னர் அந்த இடத்திற்கும் சந்தேக நபர் சென்று, சடலத்தை தேடியதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் அணிந்திருந்த செருப்பு, இறந்த யுவதியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்.
இப்பகுதி தோட்ட மக்கள் மத்தியில், இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


















